தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், ‘ரீல்ஸ்’ எடுப்பதை அதிகாரிகள் தடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், சமீபத்தில், திரைப்பட பாடலுக்கு மூன்று இளம்பெண்கள், கருவூரார் சன்னிதி பகுதியில், ரீல்ஸ் எடுத்து, சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர். சமூக ஆர்வலர்கள் பலரும், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில், கோவில்கள் புனிதமாக பார்க்கப்படுகின்றன. ‘கோவில்கள் கேளிக்கை இடங்கள் அல்ல; அங்கு, தெய்வத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும்’ என, நீதிபதிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். ‘அதை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள், கண்டு கொண்டதாக தெரியவில்லை. ‘ரீல்ஸ் என்ற பெயரில் சிலர், கோவிலின் மரபை மீறுவதை தட்டி கேட்பதில்லை. இது தவறு. ‘ஷூட்டிங்’ ஸ்பாட்டாக, கோவில்கள் மாறுவதை, அரசு வேடிக்கை பார்க்கிறது’ என்றனர்.