மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த வேண்டும்: அகில பாரத இந்து மகாசபா நுாதன மனு
பதிவு செய்த நாள்
07
ஜூலை 2026 05:07
தஞ்சாவூர்; அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என அகில பாரத இந்து மகாசபா சார்பில், அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று நுாதன முறையில் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா பொதுச்செயலாளர் ராமநிரஞ்சன் தலைமையில், அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தின் எதிரே, தலையில் துண்டு போட்டுக் கொண்டும், நெல்மணிகளை கையில் ஏந்தியவாறு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மழை வேண்டி, அறநிலையத்துறை கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என மனு அளித்தனர். இது குறித்து ராமநிரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையால், மழை வேண்டுதல் வழிபாட்டு நடத்தப்பட்டது. அதில், அனைத்து சிவன் கோவில்களில், நந்தியம் பெருமானை சுற்றி நீர் தொட்டி அமைத்து, கூட்டுப் பிரார்த்தனை நடத்த வேண்டும். நந்திகேஸ்வரர் மீது மிளகு அரைத்து சாற்றுதல், லிங்கத்தின் மேல் தாராபாத்திரம் அமைத்து, 24 மணி நேரமும் நீர் சொட்டும் வகையில் வழிபாடு, திருஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையில் இடம்பெற்ற மழை பதிகத்தை பாடி கூட்டுப் பிரார்த்தனை, அனைத்து சிவாலயங்களிலும் உள்ள திருக்குளங்களில் வேதபண்டிதர்கள் வருண ஜபம் நடத்த வேண்டும். நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதே இயற்கை வளம், நீர்வளம் மற்றும் விவசாய வளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு முயற்சியாகும். இந்து சமய அறநிலையத்துறை, உரிய சுற்றறிக்கை பிறப்பித்து செயல்படுத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு செயல்படுத்தி, மழை மற்றும் வறட்சி நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
|