அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2026 07:08
பொன்னேரி; பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவில் நிர்வாகத்தை, ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில், முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. கடந்த 1975ல், பெரும்பேடு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட முருகப்பெருமானின் 6 அடி உயர கற்சிலையை கொண்டு, கிராம மக்களால் இந்த கோவில் கட்டப்பட்டு, தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. கடந்த 2011ல், ஹிந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இந்த கோவில் கொண்டு வரப்பட்ட நிலையிலும், கிராம மக்களே தொடர்ந்து நிர்வகித்து வந்தனர். கடந்த ஆண்டு, கிராம மக்களே பல லட்சம் ரூபாய் செலவில், கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் நிர்வாகமும், தொடர்ந்து கிராம மக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த 20 தினங்களுக்கு முன், கிராமத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் இறந்த பின், கோவிலின் முழு நிர்வாகத்தையும், ஹிந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக கொண்டு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலைத்துறையினர், கோவிலுக்குள் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருவதால், கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால், கோவில் நிர்வாகத்தை ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கோவிலின் நுழைவாயில் பகுதியில், கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது: இந்த கோவில், கிராம மக்களின் சொந்த செலவில் நிறுவப்பட்டது. ஆகம விதிகளை பின்பற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராம மக்களின் நிர்வாகத்தால் தான், கோவிலுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, ஹிந்து சமய அறநிலைத்துறை, தனது கட்டுப்பாட்டில் கோவிலை எடுத்துக்கொண்டுள்ளது. கிராம மக்கள் பூஜை, வழிபாடுகளை செய்வதற்கு, கோவில் செயல் அலுவலர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்கள் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. பாரம்பரியமாக எங்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலை, கிராம மக்களிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.