மாமல்லபுரம் கோவில் வாயிற்கோபுர அடித்தளத்தில் கலைநய மூடுதளம் அமைக்க எதிர்பார்ப்பு
பதிவு செய்த நாள்
29
ஆக 2026 03:08
மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. வைணவ 108 திவ்விய தேசங்களில், 63வது கோவிலான இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்று அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலின் வளாக வாயிற்பகுதியில், கோபுரம் அமைப்பதற்காக, கலையம்ச அடித்தளத்தை மட்டுமே அமைத்து, கோபுரம் கட்டப்படவில்லை. கோவிலுக்கு உபயதாரர் மூலம், திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2024ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகில், பாரம்பரிய நினைவுச்சின்னம் அர்ஜூனன்தபசு சிற்பம் உள்ள நிலையில், பாரம்பரிய தன்மை கருதி, தொல்லியல் வல்லுநர் குழுவினர், உயரமான கோபுரம் அமைக்க வேண்டாமென அறிவுறுத்தி உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ள திவ்வியதேச கோவில், வாயிற்கோபுரம் இல்லாமல் உள்ளது. அதன் மேற்பரப்பில் செடிகள் படர்ந்து, படிப்படியாக சீரழிகிறது. கோபுரம் அமைக்க வாய்ப்பில்லாத சூழலில், அடித்தளத்தின் மேற்புற திறந்தவெளியில், கலையம்ச தளம் அமைத்து மூடுவதற்கு, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
|