சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் வாள் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2026 10:09
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ வெள்ளி வாள் வைத்து வழிபாடு நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அருள்மொழி நாதர் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் வளாகத்தில், கவுரி பீடம் உள்ளது. சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்களுக்கு இங்கு தான் முடிசூட்டு விழா நடைபெறும். இக்கோயில் ‘பட்டத்து கோயில்’ என்ற சிறப்பு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணியில் இக்கோயிலில் உள்ள கவுரி பீடத்தில் சிவகங்கை அரண்மனையில் இருந்து எடுத்து வரும் ‘வெள்ளி வாளை’ கவுரி பீடத்தில் வைத்து வழிபாடு நடத்துவர். நேற்று சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில், கவுரி பீடத்தில் வெள்ளி வாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவஸ்தான கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், சண்முகராஜன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.