பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
ஓசூர்: தமிழக அரசு உத்தரவின்பேரில், இந்து அறநிலையத்துறை சார்பில், மழை வேண்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி பெண்கள், 124 விளக்கு ஏந்தி லட்ச்சார்ச்சணை சிறப்பு பூஜை செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த, இரு ஆண்டாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் கடும் வறட்சி காணப்படுகிறது. ஆறுகளில் நீர் வரத்து முற்றிலும் வறண்டு அணைகளில் நீர் மட்டம் "கிடுகிடுவென வீழ்ச்சியடைந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் பாதாளத்திற்கு சென்றுள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு அனைத்து இந்து கோவில்களிலும் இந்து அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டிய சிறப்பு யாகங்கள், சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று(ஏப்.,14) மாலை மழைவேண்டி, 124 பெண்கள், மரதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி லட்ச்சார்ச்சணை விளக்கு பூஜை செய்தனர். அம்மனுக்கு லட்டு, தேங்காய், குங்குமம், வழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை படைத்து, ஒரு மணி நேரம் வழிப்பட்டனர். இந்த சிறப்பு பூஜையையொட்டி, நேற்று ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பூஜை ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.