குளித்தலை: பச்சை தண்ணீரில் விளக்கேற்றி அய்யர்மலை அருகே அங்காளபரமேஸ்வரி கோவிலில் பக்தர்கள் வழிபட்டனர்.அய்யர்மலை அருகே ஆதனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஏழாமாண்டு முப்பூஜை விழா நடந்தது. இதில், நெல் தானியம் கொண்டு வரப்பட்டு, ஐதீகப்படி பச்சை தண்ணீரில் விளக்கேற்றினர். ஏழு ஊர் கன்னிகளை அழைத்துக் கொண்டு நெல் உறிக்கும் பாறைக்கு சென்றனர். அங்கு நெல் உரிக்கும் பணியை கன்னிகள் மேற்கொண்டனர்.பின் குளித்தலை காவிரி ஆற்றில் அங்காளபரமேஸ்வரி கரகம் பாலித்து கோவிலுக்கு வந்தனர். இரண்டாம் நாள் ஏழு ஊர் சகோதரர்கள் நாகனூர் சென்று சூல ஆடு அழைத்து வந்தனர். இரவு, 12 மணிக்கு எரிகாவல் கொடுத்து பூஜை செய்தனர்.மூன்றாம் நாள் மதுரை வீரன் சுவாமிக்கு முப்பெரும் பூஜை, அபிஷேக ஆராதனை, அன்னதானம், ஐந்தாம் நாள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் நிறைவடைந்தது.சிவாயம் பஞ்சாயத்து தலைவர் சரவணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கழுகூர் முத்துச்சாமி, சுப்ரமணி, வீரமணி அண்ணாவி, கூட்டுறவு சங்க இயக்குநர் பால்மாணிக்கம், சிவாயம் யூனியன் கவுன்சிலர் பழனியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.