பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சோளீஸ்வரருடன் கோயில் கொண்டிருக்கிறாள் வேதநாயகியம்மன். இந்தத் திருக்கோயில், ஏறக்குறைய 1200 வருடங்களுக்கு முன், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. ராஜகணபதி, தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், ஐயப்பன், வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன், சனீஸ்வரர் ஆகியோரும் அருள்கிறார்கள். நவக்கிரக மூர்த்தியரையும் தரிசிக்கலாம். சோளீஸ்வரருக்கு, ஐப்பசி அன்னாபிஷேகம் விசேஷம்! அன்று சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாகத் தரப்படும் அன்னத்தை சாப்பிட, நோய்நொடிகள் குணமாகும் என்பது ஐதீகம்! தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சுண்டல், மாலை, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட... குழந்தைகளுக்கு கல்வி ஞானம் பெருகும்; துர்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி பிரார்த்திக்க, கன்னிப் பெண்களுக்கு தடைகள் நீங்கி, கல்யாணம் கைகூடும் என்கிறார்கள்.
நவராத்திரி 9 நாட்களும் விசேஷம். முதல் மூன்று நாட்கள் அம்பாள், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி கோலத்தில் அலங்காரம் செய்து, பூஜைகள் நடைபெறும். இந்த தினங்களில் பக்தர்கள் கொடுக்கும் கொலு பொம்மைகளை படிகளில் வைத்து, தேவார திருவாசகம் பாடி, சிறப்பாக வழிபாடு நடைபெறும். இதில் கலந்துகொள்வது பெரும் புண்ணியம். தவிர, வாழ்வில் தொடரும் துன்பங்களால் மனச் சோர்வு அடைந்தவர்கள், வியாபார நஷ்டத்தால் கலங்குபவர்கள் ஆகியோர் இந்த ஆலயத்துக்கு வந்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வேதநாயகியை வழிபட, வினைகள் யாவும் நீங்கி வாழ்க்கை சிறப்படையும்.