கும்பகோணம்: சூரியனார்கோவில் சிவசூரியபெருமானுக்கு நேற்று நடந்த மகாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான்கோவில் உள்ளது. தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள சிறப்பு பெற்ற தலம். இங்கு சூரியபெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு ஹோமத்துடன் மகாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று புரட்டாசி மாத முதல்ஞாயிற்றுக்கிழமை மகாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. உற்சவர் உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், பின் கடங்கள் எடுத்து வரப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவஷம் சாத்தப்பட்டு புஷ்பலங்காரம், புஷ்பாராதனைக்கு பின் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மகாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மகாபிஷேகத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.