சிதம்பரம்: சி.வக்காரமாரி மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தையொட்டி நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 1ம் தேதி காப்புக்கட்டுதலுடன் உற்சவம் துவங்கியது. இதனையொட்டி தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் புறப்பாடு நடந்தது. இதனையொட்டி 8ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். முக்கிய விழாவான நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது. காலை மாரியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், மாலை சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாகச் சென்று கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் சண்முகம், முருகேசன், வெங்கடேசன், அன்பழகன், கொளஞ்சியப்பன், கண்ணதாசன், கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீ ராட்டு விழா நடந்தது.