பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் சாமாத்தம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ளது கூரம் கிராமம். இக்கிராமத்து காவல் தெய்வமாக விளங்கி வரும், சாமாத்தம்மன் கோவில் அருகில் பழமையான குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிவாசிகள் இந்த குளத்தை குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர்.இந்த குளத்திற்கு நீர் வரத்து கால்வாய் மற்றும் தண்ணீர் நிரம்பியவுடன் வெளியே செல்வதற்கு கால்வாய்கள் அந்த காலத்தில் அமைத்துள்ளனர். தற்போது வீடுகள் பெருகி விட்டதால் அந்த வழியும் துார்ந்துவிட்டது. தற்போது குளத்தின் கரைகள் கரைந்து சமதளமாக இருக்கிறது. தற்போது ஆடு மாடுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த குளத்தை துார்வாரி கரையை பலப்படுத்தினால், இப்பகுதிக்கு நீர் சேகரிப்பு ஆதாரமாகவும், நிலத்தடி நீர் பெருகுவதற்கு காரணியாகவும் அமையும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
அப்பகுதிவாசிகள் கூறுகையில், இது பழமையான குளம். இப்பகுதியில் பெய்த மழைநீர், இந்த குளத்திற்கு வரும் வகையில், அந்த காலத்தில் முறையான கால்வாய் அமைத்துள்ளனர். இந்த குளம் துார்ந்து போய் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தால், நிலத்தடி நீர் பெருகுவதற்கும், கால்நடைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.