உலக நன்மைக்காக 1,008 ஹோம குண்டத்துடன் மகா சுதர்ஷன யாகம் துவக்கம்
பதிவு செய்த நாள்
20
பிப் 2026 11:02
ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று துவங்கியது. உலக நன்மைக்காக மஹா சுதர்சன ஹோமத்தை, ஆதம்பாக்கம், கே.ஆர்.ஜெ., கார்டனில், ஸ்ரீரங்கம் ஆண்டவன் பெரியாசிரம பீடாதிபதி வராஹ மஹாதேசிக ஆண்டவன் சுவாமிகள் துவக்கி வைத்து, அருளாசி வழங்கினார். இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, ஆண்டவன் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுதர்சன மஹா யாக கமிட்டி ஸ்தாபகர் கே.ஆர்.ஜெகதீசன் கூறியதாவது: பாலாஜி பட்டாச்சாரியாரின் எட்டு ஆண்டு முயற்சிக் குப்பின், உலக அளவில் முதன்முறையாக ஒரே இடத்தில், 1,008 ஹோம குண்டங்கள் அமைத்து, மஹா சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது. இதற்காக, 1,008 கிலோ நெய், 8,000 கிலோ திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த யாகத்தை, 1,008 பட்டாச்சாரியார்கள் நடத்துகின்றனர். யாகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு யாக ரக்ஷை, 25,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். இன்று அதிகாலை கோ பூஜைக்கு பின், காலை 7:00 மணி முதல் மஹா சுதர்சன ஹோமம் துவங்குகிறது. பின், மஹா பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை என, இரவு 8:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
|