குருவாயூரப்பன் கோயிலில் உள்ள அரசமரத்தை மஞ்சுள விருட்சம் என்கிறார்கள். விருட்சம் என்றால் மரம். மஞ்சுளா என்ற கிருஷ்ணபக்தை தினமும் குருவாயூரப்பனுக்கு மகிழமலர் மாலை சாத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒருநாள், மாலையில் அவள் வர தாமதமாகி விட்டது. நடை சாத்தி விட்டனர். இதற்காக அவள் வருந்தி நின்ற போது, கோயில் வாசலில் இருந்த பூந்தானம் என்ற பாகவதர், அருகிலுள்ள அரசமரத்திற்கு அந்த மாலையை அணிவிக்கும்படி ஆலோசனை சொன்னார். அதன்படியே செய்தாள் மஞ்சுளா. மறுநாள் நம்பூதிரி அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக கோயிலைத் திறந்தபோது குருவாயூரப்பன் கழுத்தில் மகிழமலர் மாலை கிடந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அதன்பின் அவருக்கு முதல்நாள் நடந்த சம்பவம் தெரிய வந்தது. அந்த அரசமரத்தையே பக்தையின் பெயரால் மஞ்சுளா விருட்சம் என அழைக்கின்றனர். இப்போது அரசமரத்தடியில், கலைநயம் மிக்க கருடன் சிற்பம் இருக்கிறது.