தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் சர்தார் நயினா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நயினா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா அக்.28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாணவநகரி, ஸ்தானிகன்வயல் கிராமத்திலிருந்து வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கபட்ட சந்தனக்கூடு இரவு ஒரு மணிக்கு புறப்பட்டது. பல்வேறு கிராமங்கள் வழியாக ஊர்வலமாக சென்று அதிகாலை 4.30 மணியளவில் பாசிபட்டினம் தர்காவை சென்றடைந்தது. ஊர்வலத்தின் போது வாண வேடிக்கைகள் நடந்தன. எஸ்.பி.பட்டினம், மருங்கூர், வட்டாணம் போன்ற பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை நேர்த்திகடனாக செலுத்தினர்.