சோழவந்தான்: சோழவந்தான் வைகை கரையில் சுயம்புவாக சனீஸ்வரபகவான் கோயிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இக்கோயிலில் பகல் 2.40 மணிக்கு சனிஸ்வரபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடபெயர்ந்தார். இதனை ஒட்டி முன்னதாக யாகசாலையில் புனிதநீர் குடங்களை வைத்து பூர்ணகுதிஹோம பூஜை, அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகாரபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் குமார்,ரமேஷ் குழுவினர் புனிதநீர் குடங்களை சுமந்து கோயில் வர, அங்கு சனிஸ்வர சுவாமிக்கு புனிதநீரை ஊற்ற, ஏராளமான பக்தர்கள் பக்திபரவசம்பொங்க தரிசித்தனர்.அனைத்து பக்தர்களுக்கும் சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சனீஸ்வரபகவான் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராஜேந்திரகுமார், ஆலயஊழியர் பூபதி செய்திருந்தனர்.