பதிவு செய்த நாள்
31
ஜன
2015
01:01
திருப்பரங்குன்றம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்தலமான திருப்பரங்குன்றம் தெய்வானையை மணந்த திருத்தலமாக விளங்குகிறது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையை முருகன் கேட்டு மகிழ்ந்த தலம். முருகமந்திரத்தை ஜெபித்து முருகனால் ஆட்கொள்ளப்பட்ட முருகம்மையார் இங்கு வாழ்ந்தவர். முருகன் மணக்கேலத்தில் காட்சியளிப்பதால் இங்கு வழிபடுவோருக்கு குறையில்லா மணவாழ்க்கை உண்டாகும்.
திருச்செந்தூர்: முருகனின் இரண்டாவது படைவீடான இது கடற்கரைத் தலம். இங்கு தான் முருகப்பெருமான், வியாழ பகவானிடம் சூரபத்மனின் வரலாற்றை கேட்டறிந்தார். வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் போரில் முருகனுக்கு உதவிபுரிந்த தலம். இங்குள்ள முருகனை சுகப்பிரம்ம முனிவர் வழிபட்டுள்ளார். முருகன் தன் வேலினால் உண்டாக்கிய கந்தபுஷ்கரணி என்னும் நாழிக்கிணறு தீர்த்தம் விசேஷமானது. பேச முடியால் இருந்த குமரகுருபரர், பாடும் திறன் பெற்று முருகனருளால் புலவராகி கந்தர் கலிவெண்பாவைப் பாடினார்.
பழநி: முருகனின் மூன்றாம் படைவீடான இங்கு தைப்பூசத் திருவிழா மிகவும் விசேஷம். லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் முருகனை வழிபட்டு பேறு பெற்ற தலம். திருஆவினன்குடி என்ற சிறப்பு பெயர் பெற்றது. சூரபத்மனின் குருநாதரான இடும்பாசுரன் அகத்தியரின் சீடராக இருந்தான். அவனால் காவடியாக சுமந்து வரப்பட்ட சிவகிரி, சக்திகிரி மலைகள் பழநியில் உள்ளன. இதன் காரணமாகவே, இங்கு காவடி வழிபாடு பிரசித்தமாக இருக்கிறது. முருகன் இங்கு கோவணத்துடன் ஆண்டிக் கோலத்தில் வீற்றிருக்கிறார்.
சுவாமிமலை: படைப்புக்கு ஆதாரமான ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனை முருகன் சிறையிலிட்டார். அவரை விடுதலை செய்யும் நோக்கில், மந்திரத்தின் பொருள் தனக்கும் தெரியாதது போல சிவன் முருகனிடம் நடிக்க, முருகப்பெருமான் தன் தந்தைக்கும் இதன் பொருளைக் கூறினார். இதனால் ‘தகப்பன் சுவாமி’ என்று போற்றப்படுகிறார். இவர் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் இருக்கிறார். வியாழக்கிழமைகளில் மாணவர்கள் இங்கு வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். திருவேரகம் என அழைக்கப்பட்ட இத்தலத்தில் முருகன் ‘சுவாமிநாத சுவாமி’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார்.
திருத்தணி: ‘மலைகளில் சிறந்தது தணிகை மலை’ என்கிறது கந்த புராணம். திருச்செந்தூரில் சூரனுடன் போர் செய்த முருகன், இத்தலத்திற்கு வந்து கோபம் தணிந்து சாந்த நிலையில் இருக்கிறார். வள்ளியை அவர் மணந்த தலம் இது. நாரதர், பிரம்மா, அகத்தியர் இவரைவழிபாடு செய்து நற்கதி அடைந்தனர். புராணகாலத்தில் ‘செருத்தணி’ என வழங்கப்பட்ட இத்தலம் திருத்தணியாக மாறியது. ‘செருத்தணி’ என்றால் ‘கோபம் தணிந்த இடம்’ என்பது பொருள். மாசியில் வரும் பூசம் நன்னாளில் வள்ளி- முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்கிறது.
சோலைமலை: கனிந்தபழங்கள் உதிர்கின்ற சோலைகள் நிறைந்த மலை என்பதால் ‘சோலைமலை’. இங்குள்ள முருகன் மும்மூர்த்தியாகவும் இருந்து உலக இயக்கத்தை நடத்துவதாக குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். நாவல் மரத்தடியில் களைப்புடன் அமர்ந்திருந்த அவ்வையார் முன், முருகன் சிறுவனாக காட்சியளித்து, ‘பாட்டி! சுட்டபழம் வேணுமா? சுடாதபழம் வேணுமா?’ என்று விளையாடல் புரிந்து பாடம் புகட்டியதோடு, இனியது, கொடியது, பெரியது என கேள்வி கேட்டு அதற்கு விடை பெற்று மகிழ்ந்தார். ஆறாவது படைவீடான இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.