வத்தலக்குண்டு : எஸ். தும்மலப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. கிராம தேவதைகள் வழிபாடு, திருமுறை பாராயணம், நேற்று முன்தினம் குபேர லட்சுமி பூஜை, சப்தகன்னி பூஜை நடந்தது. மாலை கோபுர கலசம் அமைத்து எந்திரம் வைத்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை கோமாதா பூஜை, முத்தலாம்மன், பகவதி அம்மன் சிறப்பு ஹோமத்துடன் கடம் புறப்பட்டது.
பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம நலக்குழு தலைவர் செல்வராஜன், சேதுபாண்டியன் தலைமையில் ஊர்நாட்டாமை அழகேசன், நிர்வாகிகள் அன்பு, செல்வராஜ், ஊமைத்துரை செய்திருந்தனர். கோபுர சிலைகளை சிற்பி அசோகன் செய்தார். கும்பாபிஷேகத்தை அய்யம்பாளையம் சோமசுந்தரம், திருநாவுக்கரசு குருக்கள் குழுவினர் நடத்தினர்.