பதிவு செய்த நாள்
10
பிப்
2015
12:02
ஆர்.கே.பேட்டை: தை மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி, நேற்று, வெள்ளாத்துார் அம்மன் கோவிலில் சிறப்பு உற்சவம் நடந்தது. இதில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில், வெள்ளாத்துார் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2005ல் நடந்தது. ஆண்டுதோறும் தை, ஆடி மாதங்களில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம், புத்துார், பாபாநாயுடுபேட்டை, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை வழிபடுவது வழக்கம்.
தை மாத கடைசி திங்கட்கிழமையான நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருந்தது. பக்தர்கள் மொட்டையடித்தும், மாவிளக்கு ஏற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தன. பிற்பகல் 12:00 மணிக்கு, பொங்கல் படையல் வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.