பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
11:07
சென்னை:சிவனடியாருடைய சிவத்தொண்டினையும், அவர்களது ஆன்மிக சிறப்பையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், என, நீதிபதி ஜெகதீசன் பேசினார்.சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், 23ம் ஆண்டு சேக்கிழார் விழா, சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது: சேவை செய்வது முக்கியம்சேக்கிழார் ஆராய்ச்சி மையம், நீதிபதி நடராஜன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது, 23ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. பெரியபுராணத்தில் சிவனடியாருடைய சிவத்தொண்டையும், அவரின் ஆன்மிக சிறப்பையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்க்கையை பின்பற்றி, மற்றவர்களிடம் அன்பை செலுத்தி, சிவனடியார்களுக்கு சேவை செய்வது முக்கியம். அந்த மாதிரியான வாழ்வை நாமும் தொடர்ந்து கடைபிடிப்போம் என்ற குறிக்கோளுடன், இந்த மையம் செயல்படுகிறது. இளைஞர்கள் பெரியபுராணத்தை படித்து பயனடைய வேண்டும். இளைஞர்கள், வாரம் ஒருமுறை வகுப்புகள் நடத்தி, மாணவ, மாணவியர் பங்கேற்கும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், சேக்கிழாரின் சிவத்தொண்டினையும், ஆன்மிகத்தை யும் எடுத்து கூறினார்.
விருது வழங்குதல்விழாவில், சிறந்த தமிழறிஞருக்குரிய சேக்கிழார் விருதும், செவாலியர் டாக்டர் ஜி.கே.தேவராஜுலு அறக்கட்டளை நினைவு பொற்கிழியும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.சிறந்த ஓதுவாருக்குரிய சேக்கிழார் விருதும், செவாலியர் டாக்டர் ஜி.கே.தேவராஜுலு, அறக்கட்டளை நினைவு பொற்கிழியும், ஓதுவாமூர்த்தி எத்திராஜனுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியருக்கான சேக்கிழார் விருதும், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், ராசம்மாள் அறக்கட்டளை வழக்கும் பொற்கிழியும், முனைவர் புரிசை.நடராஜனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியர்(மகளிர்) சேக்கிழார் விருதும், தமிழவேல் பி.டி.ராஜன், நினைவு அறக்கட்டளை வழங்கும் பொற்கிழியும், பேராசிரியர் புனிதா ஏகாம்பரத்திற்கும் வழங்கப்பட்டது.சிறந்த சமய சமூகத்தொண்டருக்கான சேக்கிழார் விருதும், திருக்குவளை சீனிவாசன் - மங்கையர்கரசி அறக்கட்டளை வழங்கும் பொற்கிழியும், கவிஞர் சிவ.முத்துராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த பத்திரிகையாளருக்குரிய சேக்கிழார் விருதும், சென்னை நர்மதா பதிப்பகம் வழங்கும் நெய்வேலி வித்துவான் சம்பந்தன் நினைவு பொற்கிழியும், வாசன் பிரசுரம் ஆசிரியர் ரவிபிரகாசுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த சமய சிற்றிதழ் ஆசிரியருக்குரிய சேக்கிழார் விருதும், நீதியரசர் எஸ்.நடராஜன் அறக்கட்டளை வழங்கும் பொற்கிழியும், சிவசுந்தரி ஆசிரியர் ஆட்சிலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த நுால் பரிசு: திருமுறை வழங்கும் வாழ்வியல் என்ற நுாலாசிரியர் முத்துகுமாரசாமிக்கு முதல் பரிசும், ரங்கநாதர் சிரித்தார் என்ற நுாலாசிரியர் இசக்கிக்கு இரண்டாவது பரிசும், கல்மாரி என்ற நுாலாசிரியர் அரங்கசாமிக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. விருதுகள் மற்றும் பரிசுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், சேக்கிழார் ஆராய்ச்சி மைய அறங்காவலர் ரமேஷ்ராஜன் வழங்கினார். தேவார திருமுறை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு சேக்கிழார் ஆராய்ச்சி மைய துணைத்தலைவர் சுவாமிநாதன் பரிசுகளை வழங்கினார்.கீழ்திசை நாடுகளில் தமிழக கலைத்தாக்கம் என்ற ஒளிக்காட்சியும் விளக்கமும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வழங்கினார்.