சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் ரூ.81 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2015 11:07
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் கோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியங்களை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. மூன்று ஆண்டுகளில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இங்குள்ள ராஜகோபுரம் 133 அடி உயரமும், ஏழு அடுக்குகளையும் கொண்டது. கோபுரத்தின் உட்பகுதியில் ராமாயண காட்சிகளை விளக்கும் மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. கோபுரமும், அதில் உள்ளே உள்ள ஓவியங்களும் சிதிலமடைந்து வந்த நிலையில் அதை சீரமைக்க முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அதன் படி கோபுர சிற்பங்களை சீரமைக்க 33 லட்சம் ரூபாயும், மூலிகை ஓவியங்களை சீரமைக்க 81 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி கோபுர சிற்பங்கள் சரி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது. ஓவியங்களை சீரமைக்கும் நேற்று தொடங்கியது. இதற்காக ஓய்வு பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வீரராகவன் தலைமையில் ஒரு குழுவினர் சுசீந்திரம் வந்தனர். சிறப்பு பூஜைக்கு பின்னர் ஓவியம் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்த பணியில் 60 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், இது முடிவடைவதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் வீரராகவன் தெரிவித்தார்.