சிலர் மோதிர விரலால் திருநீறை எடுத்து நெற்றியில் பூசுவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் தெரியுமா? நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை நம் உடல் ஈர்த்துக் கொள்ளும் வல்லமை பெறுகிறது. அது மட்டுமல்ல! விபூதி இட்டவரைச் சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களுக்கும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால் தீயவற்றைத் தவிர்க்க முடியும். புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு பூசினால் வாழ்வு என்றால் என்ன என்ற ஞானம் கிடைத்து விடும். தொண்டைக்குழியில் (விசுத்தி சக்கரம்) பூசினால் உடலிலும், மனதிலும் சக்தி அதிகரிக்கும். நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம். விபூதியை மோதிர விரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப் படுத்தும் சூட்சுமம் அங்கு தான் உள்ளது.