பதிவு செய்த நாள்
01
அக்
2015
10:10
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா அக்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அக்., 22 ல் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. குலசேகரபட்டிணத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர், உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும். இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு அடுத்தபடியாக இந்த கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, அம்மன், காளி வேடங்கள் உட்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கோயிலுக்கு வருகை தருவார்கள். கொடியேற்றம்: முத்தாரம்மன் கோயிலில் அக்., 13 ல் காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்ட திருவீதி உலாவும், 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின் கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கவுள்ளது.அம்மன் திருவீதியுலா: விழா நாட்களில் தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினமும் இரவு பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.அக்.,22ல் இரவு 11 மணிக்கு அம்மன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின் அலங்காரத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளுவார். அங்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அக்., 24 மாலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன், உதவி கமிஷனர் அன்னக்கொடி. நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.