துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) எதிர்பாராத பணவரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 02:11
தர்ம சிந்தனை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
சுக்கிரன் நவ.30ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். இந்த மாதம் பிற்பகுதியில் அதிக முன்னேற்றம் உண்டாகும். குருவும்,கேதுவும் ஓரளவு நன்மையளிப்பர். மற்ற கிரகங்கள் சுமாரான நிலையிலேயே உள்ளன. முயற்சியில் வெற்றி கிடைக்க பெண்களின் வசம் பொறுப்பை ஒப்படைப்பது நல்லது. புதனால் ஏற்பட்ட அவப்பெயர், மனக்கவலை ஆகியன நவ. 30க்கு பிறகு மறையும்.. கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்பு நீடிக்கும். மாத பிற்பகுதியில் பெண்களால் பொன், பொருள் சேரும்.
தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். நவ. 30 க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சியடையும். அரசு வகையில் சாதகமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். நவ. 21,22ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுவர். மாத பிற்பகுதியில் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசு வேலை யில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்தவும். நவ. 30, டிச.1ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
கலைஞர்களுக்கு மனச்சோர்வு நவ. 30க்கு பிறகு மறையும். அதன்பின், புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் பரிசு, பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது.
மாணவர்கள் மந்த நிலை மாறி ஆர்வமுடன் படிப்பர். மனதில் துணிச்சல் பிறக்கும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு கை கொடுக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளிப் போகும்.
பெண்கள் குதூகலம் அடைவர். மாத பிற்பகுதியில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.