இஸ்ரேலின் அரசராக இருந்த தாவீது, ஈசாய் என்பவரின் மகன். இவருக்கு முன்னதாக ஈசாய்க்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். ஏழு பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்ட ஈசாய், கடைசி மகனான தாவீதுவிடம், சிறுவனாக இருந்த காலத்திலேயே தனது ஆடுகளை மேய்த்து வரச் சொன்னான். ஊரை விட்டு தள்ளியுள்ள மேய்ச்சல் நிலத்தில் பல மாதங்கள் தங்கி மேய்க்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனை விதித்தான். இதனால், தாவீதுவுக்கு ஆடுகள் மட்டுமே உறவாயின. தன் அன்பையெல்லாம் அவற்றின் மீது பொழிந்தான். ஆண்டவருக்கு இச்செயல் மிகவும் விருப்பமாயிற்று.அவனை சிறப்பிக்க நினைத்த அவர், அவனை இஸ்ரேலின் ராஜாவாக்க எண்ணினார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை ஈசாயின் வீட்டுக்கு அனுப்பினார். அவரது பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க உத்தரவு இருப்பதாக அவர் ஈசாயிடம் சொன்னபோது, அவன் ஏழு பிள்ளைகளையும் வரிசையாக நிறுத்தினான். அப்போது கூட தாவீதுவை அவன் வரவழைக்கவில்லை. எட்டாவது பிள்ளையும் வராவிட்டால், உங்கள் வீட்டில் சாப்பிட மாட்டேன் என சாமுவேல் சொன்ன பிறகு, வேண்டாவெறுப்பாக தாவீதுவை வரவழைத்தான். ஆனால், அவனையே ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார் ஆண்டவர்.குழந்தைகளில் மட்டுமல்ல, மற்றவர்களிலும் ஏழைபணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதே இன்றைய சிந்தனை.