பதிவு செய்த நாள்
01
ஜன
2016
12:01
கிருஷ்ணகிரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பாடல் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டி கிருஷ்ணகிரியில் நாளை (2ம் தேதி) நடக்கிறது என, உதவி ஆணையர் நித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாளை (2ம் தேதி) பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை மற்றும் பாடல் ஒப்புவித்தல் போட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. காலை, 10 மணி முதல், 11 மணி வரை கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டாள் அல்லது மாணிக்கவாசகர் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஆண்டாள் காட்டும் வாழ்வியல் நெறி அல்லது மாணிக்கவாசகர் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை, திருப்பாவை உணர்த்தும் பெண்கள் பெருமை அல்லது திருவெம்பாவையில் பெண்கள் விளையாட்டு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதேபோல் பாடல் ஒப்புவித்தல் போட்டி, 2ம் தேதி காலை, 11 மணி முதல், 3 மணி வரை நடக்கிறது. இதில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை திருப்பாவை, திருவெம்பாவை (1 முதல் 3 முடிய உள்ள பாடல்கள்), 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை திருப்பாவை, திருவெம்பாவை (4 முதல் 8 முடிய உள்ள பாடல்கள்), 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திருப்பாவை மற்றும் திருவெம்பாவை (11 முதல் 20 முடிய உள்ள பாடல்கள்) ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.