பதிவு செய்த நாள்
04
ஜன
2016
11:01
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டணங்கள் வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து சென்னை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் முருகன் கோயில்களில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
முறைகேடு புகார்: பக்தர்கள் சாமி தரிசனம், விடுதி ஒதுக்கீடு, மொட்டை எடுத்தல். உட்பட அனைத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதில் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை காட்டிலும் அதிகமாக பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது குறித்து இங்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் தெரிவித்து வந்தனர்.
கமிஷனர் ஆய்வு: கட்டண முறைகேடு குறித்து சில நாட்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சண்முகசிகாமணி ஆய்வு செய்தார். கட்டணமுறைகேடுகள் குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதிரடியாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னை அதிகாரிகள் ஆய்வு: சென்னை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் 30 பேர், திருநெல்வேலி மண்டல இணை கமிஷனர் லட்சுமணன் தலைமையில் திருச்செந்தூர் கோயிலுக்கு நேற்று காலை 9 மணிக்கு வருகை தந்தனர். கட்டண வசூலிக்கும் இடங்களில் ஆய்வுகள் நடத்தினர். நாழிகிணறு, மொட்டை கட்டணம், விடுதி ஒதுக்கீடு, சுவாமி தரிசன கட்டண கவுண்டர்களில் அதிகாரிகள் கட்டண வசூல் குறித்து கேட்டறிந்தனர். தினசரி விற்கப்படும் கட்டண ரசீதுகளின் எண்ணிக்கை, சம்பந்தமில்லாத நபர்கள் இருந்தால், அவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். பக்தர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது.
துறை ரீதியாக நடவடிக்கை: அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில்,ஒவ்வொரு ஊழியர்களிடமும் தனித்தனியாக அறிக்கை பெற்றுள்ளனர். முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கவுண்டர்களில் உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வருமானம் குறைந்ததா?: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் கட்டணங்கள் உட்பட அனைத்து வகையிலும், 22 கோடி ரூபாய் வரை அறநிலையத்துறைக்கு வருமானம் கிடைக்கும். தற்போது 16 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆறு கோடி ரூபாய் வருமானம் குறைந்ததால், தான் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர், என, கோயில் ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.