பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
01:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப்பிறப்பின் முதல் நாளன்று, திரு நேர் அண்ணாமலையார் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். அதன்படி, சித்திரை மாத முதல்நாளான நேற்று காலை, சூரியன் உதயமானவுடன் சிறிது நேரம் கழித்து, கோவில் மூல கருவறையில் உள்ள அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழுந்தது. இதை காண அதிகாலை, 5 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சூரிய ஒளி மூலவர் மீது விழுந்ததும் சுவாமி தரிசனம் செய்தனர். சூரிய ஒளி விழுவதை பக்தர்கள் காண வசதியாக, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அகண்ட திரை வைக்கப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டு, கிரிவலம் சென்றனர்.