பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
09:07
மதுரை: முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் இன்று, வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விழாக்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஆடி கிருத்திகை தினம் மிகவும் விசேஷமாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வடபழனி, கந்தக்கோட்டம், அறுபடை வீடு, திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, மயிலம் மற்றும் அறுபடை வீடு தலங்களிலும், மற்ற முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில்களில் விடியற்காலை முதல், இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. அத்துடன், மூலவருக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. லட்சார்ச்சனை, இரவு திருவீதியுலாவும் நடக்கின்றன. பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற தலங்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி, வழிபட வசதியாக, கட்டண தரிசனத்திற்கும், சாதாரண தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பிற்கு அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.