பதிவு செய்த நாள்
05
ஆக
2016
11:08
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி, திருப்பூர் அருகே தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, செப்.,5ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, இந்து முன்னணி சார்பில், கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட ங்களில், பிரதிஷ்டை செய்வதற்காக, 5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, சிவலிங்கத்தை துõக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள், ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி, புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர், கற்பக விருட்ச விநாயகர், கமல விநாயகர், சிம்மம், யானை வாகனத்தில் எழுந்தருளும் விநாயகர் ஆகிய புதிய வடிவங்கள், சிலைகள் தயாரிப்பில் உள்ளன. இவை மூன்றரை அடி முதல், 11 அடி வரை, வித்தியாசமான வடிவங்களில், உருவாக்கப் படுகின்றன. இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தாண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில், 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 5ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை, விநாயகர் சதுர்த்தி விழா, கோலம், விளையாட்டு, கலை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு, என கலாச்சார பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காகித கூழ், பச்சை மாவு ஆகியவை கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு, வாட்டர் கலர் கொண்டு வர்ணம் பூசப்படுகிறது. இவ்வாறு, கிஷோர்குமார் தெரிவித்தார்.