பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
மீஞ்சூர்: சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் இருப்பதால், மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், அடுத்தடுத்த திருட்டு முயற்சியால் கோவிலை பாதுகாக்க முடியுமா என்ற கவலை பக்தர்களிடம் எழுந்துள்ளது. சிறப்பான ஆன்மிக தலங்களில் ஒன்றாக, திருவள்ளூர் மாவட்ட மக்களால் கருதப்படும், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூரில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான இக்கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமி சன்னிதி இருக்கிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறும் விசேஷ தினங்களும், உற்சவங்களும் இங்கும் நடந்தேறுவதால், இதற்கு, வடகாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், 2011ம் ஆண்டு, ராஜகோபுரம் அமைப்பதற்காக, நுழைவு வாயில் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து, தற்காலிக இரும்பு தகடு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, ஆறுமுகசாமி சன்னிதி அருகே தற்காலிக வழி ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட தற்காலிக இரும்பு தடுப்புகள் உடைந்து கிடக்கின்றன. இந்த வழி மூலம், இரவு நேரங்களில் வெளிநபர்கள் எளிதாக உள்ளே சென்று வருகின்றனர்; சமூக விரோத செயலும் நடந்தேறுவதாக கூறப்படுகிறது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவிலின் பூட்டை உடைக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது. இரண்டு முறை, மடப்பள்ளியின் பூட்டை உடைத்து, மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வெள்ளி பொருட்கள் திருடு போயின. கோவிலுக்கென காவலர் யாரும் இல்லாததால், இது போன்ற செயல்கள் அரங்கேறுவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.அரணாக விளங்க வேண்டிய சுற்றுச்சுவர், சிதிலமடைந்து காணப்படுவது, கோவிலின் பாதுகாப்பிற்கு பெரும் கேள்விக்குறியாய் இருப்பதாக, பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
1.மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில். 2. சுற்றுச்சுவருக்கும் கோபுர பணிகள் நடைபெறும் பகுதிக்கும் இடையே அடைக்கப்படாத வழி. 3. தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு தகடுகள் உடைந்து கிடக்கின்றன. 4. தற்காலிகமாக பக்தர்கள் செல்வதற்காக, ஆறுமுகசாமி சன்னிதி அருகே உள்ள வழி.
பாதுகாப்பான தடுப்புகள் தேவை: காயலான் கடை தற்காலிக தடுப்புகள் கோவிலின் பாதுகாப்பிற்கு பயன்படாது. கோபுர பணிகள் முடியும் வரை அந்த வழியை யாரும் பயன்படுத்தாத இரும்பு கிரில் அல்லது சிமென்ட் சுவரில் பாதுகாப்பான தடுப்பு ஏற்படுத்த வேண்டும். கோபுர பணிகளையும் துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.கோகுலகிருஷ்ணன்மீஞ்சூர்
வாட்ச்மேன் இல்லை: பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாய் இருப்பது, கவலையடைய செய்து உள்ளது. கோபுர பணிகளுக்காக இடிக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்ட தடுப்புகள் ஓட்டை உடைசல்களுடன் கிடக்கின்றன. சுற்றுச்சுவர் அமைக்கவும், இரவு காவலரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.காமராஜ் மீஞ்சூர்
விரைவில் தீர்வு கிடைக்கும்!: தற்போது தான் கோவில் நிர்வாக பொறுப்பேற்று உள்ளேன். நிதியுதவி பெற்று, சுற்றுச்சுவரை சீரமைத்து, கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய, விரைவில் தீர்வு காணப்படும். வாட்ச்மேன் போடவும் அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். அறநிலையத்துறை அதிகாரி ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர்