பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுள்ள 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தலவிருட்சமான வன்னி மரத்தை மீட்க மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பழமையான கோவில்களில் மூலவருடன் தொடர்புடைய மிக அபூர்வ தலவிருட்சங்கள் பட்டுப் போவதைத் தடுக்க மரபணு அல்லது பிற தாவர இனப்பெருக்க முறையில் மீட்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய இணை ஆணையர் எல்லைக்குட்பட்ட விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருவக்கரை வக்ரகாளியம்மன், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், வேலுடையான்பட்டு முருகன் கோவில், செங்கம் வேணுகோபாலசாமி, திருவரங்கம் ஆதிதிருவரங்கம் உள்ளிட்ட 10 கோவில்களின் தலவிருட்சங்களை மீட்டெடுக்க இணை ஆணையர் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம் தலவிருட்சமாக உள்ளது. 1,500 ஆண்டுக்கு முன்பே விபசித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலின் கட்டுமானப் பணிக்காக, பணியாளர்களுக்கு வன்னி மரத்தின் இலைகள் ஊதியமாக வழங்கப்பட்டது. அவற்றை பெற்றுச் செல்பவர்களின் உழைப்பிற்கேற்ப பணமாக மாறியதாக கோவில் தலவரலாறு கூறுகிறது. தற்போது இந்த வன்னி மரத்தின் அடிப்பாகம் நலிவடைந்து பட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் இம்மரத்திற்கு விதையோ, கன்றோ இல்லாத நிலை உள்ளது. அதனால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த தலவிருட்சத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த வாரம் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதையடுத்து, முதல் முயற்சியாக வன்னிமரத்தின் கிளை ஒன்றை வெட்டி எடுத்து, அதை விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பதியம் போட்டு, வேர் உற்பத்தி செய்யும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி
பலனளிக்கவில்லை என்றால் மரத்தின் திசுக்களை எடுத்து அதன்மூலம் மரத்தின் புதிய கன்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் கருணாகரன் தெரிவித்தார். இது குறித்து விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் அனீஷாராணி கூறுகையில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தலவிருட்சமான வன்னிமரம் பட்டுபோகும் நிலையில் உள்ளது.
இதனால், அதன் இனத்தை உற்பத்தி செய்து, கோவிலில் நட்டு வளர்க்க புதிய கன்றை உருவாக்கித்தர, செயல் அலுவலர் கருணாகரன் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, அந்த மரத்தின் கிளையின் தண்டு ஒன்றை வெட்டியெடுத்து வந்து, மண்டல ஆராய்ச்சி நிலையப் பண்ணையில் பதியம் போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அந்த தண்டு வேர்விடும் பட்சத்தில் அதிலிருந்து புதிய கன்றுகள் உற்பத்தி செய்து, கோவில் வளாகத்தில் நட்டு வளர்க்க
வழங்கப்படும் என்றார்.