பக்திக்கு விரிவான செயல்முறைகள் எதுவும் கிடையாது. ஏழை - பணக்காரன், ஆண்-பெண், கற்றவர் - கல்லாதவர், சிறியவர் - பெரியவர் ஆகிய எல்லோருமே இறைவனை அடைய பக்தி என்ற வழியில் ஈடுபடலாம். நேரம், காலம் என்ற கட்டுப்பாடுகளும் இதற்குக் கிடையாது. பக்தியே முக்திக்கு எளிய சாதனமாகும். இதற்கான வழியை குரு சொல்லிக் கொடுப்பார். எனவே, அவரை மதித்துப் போற்றுவது முக்கியம். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவன் தவறுதலாகக் குருவை அவமரியாதை செய்தாலும் கடவுளே கூட அதை மன்னிக்க மாட்டார். ஏனெனில், கடவுளின் உறைவிடமாக குருமார்கள் விளங்குகிறார்கள். ஆண்டவனுடைய அருட்சொல்லை அவர்கள் உலக நன்மைக்காக மக்களிடையே பரப்புகிறார்கள். பிறர் குற்றங்களை மன்னித்து விடுவது மனிதத் தன்மை. அப்படியே மறந்து விடுவது தெய்வத் தன்மை. அத்தன்மை பக்தியாலேயே வரும். குளவி புழுவைக் கொட்டிக் கொட்டிப் பூச்சியாக்குவது போல இறைவனுடைய நினைவை எப்போதும் மனத்தில் இருத்தி, ஆன்மிகக் கடமைகளைச் செய்து வருபவன் மகத்தான சக்திகளைப் பெற்று விடுகிறான். உன்னத எண்ணங்கள், அன்பு மொழிகள், நல்ல சொற்கள் ஆகியவைதான் இறைவனை அடைய மிகவும் எளிய வழிகளாகும். படிப்பாலும் பணத்தாலும் கடவுளைக் காண இயலாது பக்தி ஒன்றினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். எந்த நேரம் நம்மால் இறைவனுடைய திருநாமம் நினைக்கப்பட்டதோ, அது மட்டுமே நம்முடைய நேரம். எவ்வளவு பொருளை அறவழியில் செலவழித்தோமோ அவ்வளவு மட்டுமே நம்முடைய பொருள்.