ஒருமுறை வெள்ளத்தால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா தனது படைப்புக்கருவிகளை ஒரு அமுத கலசத்தில் வைத்து நீரில் மிதக்க விட்டார். அது கும்பகோணத்தில் கரை ஒதுங்கியது. சிவன் அந்த கலசத்தின் மீது அம்பு எய்து உடைத்தார். கலசத்தில் இருந்த அமுதம் குளம் போல் தேங்கியது. அது மகாமகக்குளம் எனப்பட்டது. இந்த குளக்கரையில் சிவன் 16 இடங்களில் லிங்க வடிவில் தங்கினார். மேலும், கும்பத்தின் பெயரால் கும்பேஸ்வரர் என்ற பெயர் தாங்கி இங்கு அருள்பாலித்தார். மகாமகக் குளத்தில் நீராடி, 16 லிங்கங்களையும் வழிபட்டால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை. மாசி மகம் நட்சத்திரத்தன்று இந்த சம்பவம் நிகழ்ந்ததால், மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.