பதிவு செய்த நாள்
18
மார்
2017
12:03
கோபி: சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகளின், இரண்டாவது நாள் ஆன்மீக பயணம், கோபியில் நேற்று கோலாகலமாக நடந்தது. சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள் ஸ்ரீபாரதீ மஹா ஸன்னிதானம், அவர் சிஷ்யர் ஸ்ரீவிதுசேகர பாரதீ ஸன்னிதானம் சுவாமிகள், ஆன்மீக பயணமாக ஈரோடு மாவட்டம், கோபிக்கு நேற்று முன்தினம் வந்தனர். கோபி கிருஷ்ணன் வீதியில் உள்ள, சாரதா கிருபா இல்லத்தில் சுவாமிகள் அன்றிரவு தங்கினார். நேற்று காலை, 10:30 மணியளவில், அதே வீதியில் உள்ள, நந்தகோகுலத்தில் காத்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்க சென்றார். கோசாலை நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதையுடன், சுவாமிகளை வரவேற்றனர். ஓரிரு மாடுகளுக்கு பெயர் சூட்டினார். அதற்கு பின், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்ர சுவாமி கோயிலில், சுவாமிகள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு சென்றனர். சுவாமிகள் வருகையால், கிருஷ்ணன் வீதி, அக்ரஹாரம், ஈஸ்வரன் கோயில் வீதி நேற்று விழா கோலம் பூண்டிருந்தது. இன்று மாலை சுவாமிகள், ஈரோடு புறப்பட்டு செல்கின்றனர்.