பதிவு செய்த நாள்
20
மார்
2017
12:03
ப.வேலூர்: காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால், தற்காலிகமாக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றில், நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் பக்தர்கள் நீராடி, தீர்த்தம் எடுத்துச்சென்றனர். ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த, 12ல் துவங்கியது. பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கும், அம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததால், ஆற்றின் மையப்பகுதியில் ஊற்று அமைக்கப்பட்டு, இன்ஜின் மூலம் தண்ணீரை எடுத்தும் சென்று, செயற்கை நீரூற்று வழியாக நீராடுவதற்கும், தீர்த்தம் எடுத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து அம்மனை வழிபட்டனர். தீமிதி விழா அன்று கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் நேற்றிலிருந்தே, குழந்தை வரம், நோயுற்ற குழந்தைகள் விரைவில் குணமடைய வேண்டி, பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை எடுத்துச் சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.