பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
கெலமங்கலம்: கெலமங்கலத்தில் நடந்த, பட்டாளம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள பட்டாளம்மன் மற்றும் கரகம்மன் கோவில் திருவிழா, கடந்த, 25ல், துவங்கியது. அன்றைய தினம் அம்மனை, கெலமங்கலம் எல்லையை விட்டு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மே, 1ல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி, 2ல் கரகம்மனுக்கு பூ அலங்காரம், 3ல், தொட்டேகானப்பள்ளியில் கரகம், 4ல் மாரியம்மன் கோவிலில் திருவிழா மற்றும் கரகம், 5ல், கெலமங்கலம் பகுதியில் கரகம், 6ல் காப்பு விடுவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 9:00 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தளி எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், பட்டாளம்மன் கோவில் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (மே 10) மதியம், 3:00 மணிக்கு, ஒன்பது கிராம மக்கள் சார்பில், அம்மன் ஊர்வலம், இரவு, 8:00 மணிக்கு பட்டாளம்மன் பூ பல்லக்கு நடக்கிறது.