பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
கொடுமுடி: மகுடேஸ்வரர் கோவிலில், மூலவர் சிலையை குளிர்விக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல், இறுதி நாள் வரை, 27 நாட்களுக்கு, சுயம்புவான மகுடேஸ்வரர் சுவாமி குளிர்விக்கப்படுவார். தற்போது அக்னி நட்சத்திரம் நிலவுவதால், மூலவர் சுயம்புவான மகுடேஸ்வரரை குளிர்விக்க, லிங்கத்தின் மீது தாமிர பாத்திரம் தொங்க விடப்பட்டுள்ளது. அதில், காவிரி நீர் ஊற்றப்பட்டு வெட்டிவேர், நன்னாரி, விளாமிச்சை, பச்சைக் கற்பூரம் ஆகிய மூலிகை நறுமணப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாத்திரத்தில் இருந்து, சொட்டு சொட்டாக, லிங்கத் திருமேனி மீது விழும் நீர், உஷ்ணத்தை குறைக்கும். அதே சமயம் சிலை குளிர்வது போல், மழை பெய்து பூமியும் குளிரும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.