முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், நாள்தோறும், 5 கால பூஜை நடக்கிறது. இக்கோவிலில், தங்கத்தேர் உள்ளதால், தினமும் மாலை, தங்க தேர் புறப்பாடு நடந்து வந்தது. இதற்கு, பக்தர்கள், 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி, முன்பதிவு செய்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில், தேர் வலப்பாதையில், கல் தளம் அமைக்கும் பணி, கும்பாபிஷேக பணி, வசந்த மண்டபம் கட்டும் பணி போன்ற வளர்ச்சி பணிகள் மேற்கொண்டதால், கடந்த, 2 ஆண்டுகளாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், நேற்று மாலை, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. இதனை, கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.