பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
04:06
ஆனித்திருமஞ்சன தரிசனம் செய்தால் கிட்டக்கூடிய சில பொதுப்பலன்கள் உள்ளன. திருமணம், நல்ல ஆரோக்கியம், திட சித்தம், மன உறுதி ஆகியவை கிட்டுவதோடு அறியாமல் செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் தொலையும்.
எந்த அபிஷேகம் கண்டால் என்னென்ன பலன்: 1. சுத்தமான நீர் - பாவங்கள் போகும், 2. எண்ணெய் - தேகம் வலுப்பெறும், 3. அரிசி மாவு - கடன் தொல்லை தீரும், 4. நெல்லி முள்ளி - நோய் நீங்கும், 5. பஞ்சகவ்யம் - மனதில் நல்ல சிந்தனைகள் உருவாகும், 6. இளநீர் - இனிமையான வாழ்க்கை அமையும், 7. தேன் - மனம் ஆனந்தத்தால் நிரம்பும், 8. தயிர் - நன்மக்கட்பேறு வாய்க்கும், 9. பால் - ஆயுள் கூடும், 10. நெய் - வீடு பேறு கிடைக்கும், 11. கரும்புச்சாறு - வாத பித்த தோஷங்களைப் போக்கும், 12. சந்தனம் - செல்வச் செழிப்பு உண்டாகும், 13. பன்னீர் - தேவையான பணம் எப்போதும் கிடைக்கும், 14. பஞ்சாமிர்தம் - வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.
மேற்கூறிய அபிஷேகங்களைக் காணும்போது மனம் இறைவனோடு ஒன்ற வேண்டும். வேறு எந்த சிந்தனையும் மனதில் புகுந்து விடாமல் இருக்க நாம் சிவாய நம என்ற மந்திரத்தையோ ஓம் நம சிவாய என்ற மந்திரத்தையோ ஓதியபடி இருக்கலாம். அபிஷேகம் நடக்கும் போது, இறைவா! இந்த அபிஷேகத்தைக் கண்ணால் காணக் கிடைத்திருப்பதே என் பேறு! இதன் முழுப்பலனையும் எனக்கு அருள்வாயாக என்று மனமுருகிப் பிரார்த்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் நற்பலன்கள் கிடைப்பதை நாம் விரைவில் உணரலாம். ஆனித்திருமஞ்சன் உற்சவம் நடக்கும் சிவன்கோயில்களுக்குச் சென்று அபிஷேகங்களைக் கண்டு இறைவனின் அருளைப் பெறுவோம்.