சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி வெயிலுக்காக அக்னி நட்சத்திர காலத்தில் சிவன் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
தாராபிஷேகம் என்பது செம்பு பாத்திரத்தில் சந்தனம், ஜவ்வாது, பன்னீர், வெட்டிவேர் உள்ளிட்டவைகளை வைத்து அவற்றில் புனித நீரை மூலவரின் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும்படி பொருத்தப்படுகிறது. சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்ட பிறகு மூலவரின் மேல் செப்பு பாத்திரத்தில் புனித நீர் படுமாறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் வெயிலின் தாக்கம் குறைவதற்காக தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. இதே போன்று உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலிலும், டி.எம்.கோட்டை செஞ்சடைநாதர் கோயிலிலும் தாராபிஷேகம் துவங்கியுள்ளது.