தமிழிசையைத் தன் பக்திப் பாடல்களால் வளப்படுத்தியவர் ஆண்டவன்பிச்சி என்ற பெண்துறவி. இல்லற வாழ்வு வாழ்ந்து பின் துறவினியான இவரின் நிஜப்பெயர் மரகதம்மா. ஆண்டவன்பிச்சியின் குருநாதராக இருந்தவர் மகாபெரியவர். அப்படியொரு பக்தி அவர் மேல். மரகதம்மாவின் இல்லற வாழ்வில் வெங்கடராமன், பத்மா, வாசுதேவன் எனப் பல குழந்தைகள் பிறந்தனர். ஆனால் தன் வாழ்வை நாடகம் பார்ப்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார் மரகதம்மா. மரகதம்மாவின் குழந்தை பத்மாவும் மூன்று வயதிலேயே பாடல்கள் இயற்றினாள். இன்னும் ஆச்சரியம்...குழந்தைப் பருவத்திலேயே அவள் தன் தாயைப் போல பெரியவரின் பக்தையாக இருந்தது தான்!
குழந்தை பத்மா திடீரென்று ஒருநாள் பார்வை இழந்தாள். பெரியவரைச் சரணடைந்தார் மரகதம்மா. பெரியவர் குழந்தையின் விழிகளை இரு விரல்களால் தடவி, ஆசீர்வதித்தார். மரகதம்மாவிடம் பந்த பாசங்களுக்கு உட்படாமல் இரு! என அறிவுறுத்தினார். சில ஆண்டுகளில் விண்ணுலகம் செல்லப் போகிறது அக்குழந்தை என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். குழந்தை பத்மாவுக்குச் சில நாட்களில் கண்பார்வை மீண்டது. எட்டு வயதை எட்டிய போது, நவராத்திரி காலத்தில் ஒருநாள் தானே தொடுத்த பூமாலையை தேவி சிலைக்கு அணிவித்துத் தேவியின் பாதங்களில் விழுந்தவள், தேவியுடன் கலந்து விட்டாள். மரகதம்மாவின் மகன் வாசுதேவனும் இளம் வயதிலேயே முக்தி அடைந்தார். சங்கர் என்ற மகன் மனநிலை சரியில்லாதவராகி காலமானார். மற்ற குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையடைந்தனர். இந்தக் குடும்ப நாடகம் எதுவும் மரகதம்மாவின் முருக பக்தியையோ, பெரியவர் மேலான பக்தியையோ பாதிக்கவில்லை.
திடீரென்று மரகதம்மாவுக்கு உடல் நலமில்லாமல் போயிற்று. ஓர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த மரகதம்மா, ரமணரைப் போல் மயக்க மருந்துக்கு ஆட்படாமலேயே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதன்பின், மரகதம்மா ஆன்மிக அன்பர்களால் ஆண்டவன் பிச்சி என அழைக்கப்பட்டார். சொந்த வாழ்வின் துயரங்களைப் பொருட்படுத்தாது, ஸித்தி அடையும் வரை பரமாச்சாரியாரின் பக்தையாகவே இருந்து மறைந்தார். டி.எம். சவுந்தரராஜன் பாடிய உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர் அவர்தான்! உடலிலிருந்து மனத்தைப் பிரிக்கும் பக்குவம் பெற்றிருந்த மரகதம்மா, ரமணரைப் போல், மயக்க மருந்துக்கு ஆட்படாமலேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். திருப்பூர் கிருஷ்ணன்