பதிவு செய்த நாள்
16
ஆக
2017
12:08
தர்மபுரி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, மூலவருக்கு பால், தயிர், தேன், சந்தனம், குங்கும் உட்பட
பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின், உற்சவ மூர்த்தி கோவிலில் இருந்து தேரில் ஊர்வலமாக புறப்பட்டு, எஸ்.வி.,ரோடு,
கடைவீதி, சுண்ணாம்புகார வீதி, காந்தி தெரு உட்பட, நகரின் முக்கிய வீதிகள் வழியாக
ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். இதேபோல், தர்மபுரி அன்னசாகரம் சக்திவிநாயகர் பாலமுருகன் சுவாமி கோவில், குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாப்பாரப்பட்டி பழைய சுப்பிரமணி சுவாமி கோவில், பாலக்கோடு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பைநல்லூர் முருகன் கோவில், லளிகம் பாலமுருகன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.