பதிவு செய்த நாள்
22
ஆக
2017
12:08
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, கேரளா பாணியில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை மற்றும் கோவில் நிலம் தொடர்பான வழக்கு நடப்பதால், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடியவில்லை. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேற்கூரை சேதமடைந்து, அதை தாங்கி நின்ற மரக்கட்டைகளும் உடைந்தன. இவற்றை அகற்றி விட்டு, தனியார் பங்களிப்புடன், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி, கடந்த ஜூலை முதல் வாரம் தொடங்கியது. முதல் கட்டமாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, இரண்டு போர்வெல் போடப்பட்டது. பின் படிப்படியாக, பழைய மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் அகற்றப்பட்டன. கேரளா மாடலில் மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக இரும்பு தளவாடம் தயாரித்து, மேற்கூரை பிரேம் அமைக்கப்பட்டது. ஓடுகள் பொருத்தும் பணி, 10 நாட்களாக நடந்தது. நேற்று பணி நிறைவடைந்தது. இனி சுற்றுச்சுவர் கட்டும் பணி, தரைத்தளம் உயர்த்தும் பணி முடிந்தால், 100 சதவீதம் நிறைவடையும். திருப்பணி நடப்பதால், பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. விரைந்து பணிகளை முடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.