பதிவு செய்த நாள்
13
செப்
2017
11:09
பரங்கிமலை: பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த, பழண்டியம்மன் கோவில் இடம், நீதிமன்ற உத்தரவின்பேரில், நேற்று மீட்கப்பட்டு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை, பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள பழண்டியம்மன் கோவில், இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தின், ஒரு பகுதி, ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது. அதில், கடைகள் மற்றும் சைக்கிள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வந்தன. ஆக்கிரமிப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக வழக்கு நடந்தது. சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. ஆக்கிரமிப்பு இடத்தை கோவில் வசம் ஒப்படைக்க, நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு இடம், நேற்று மீட்கப்பட்டது. கட்டடம் மற்றும் வேலி அகற்றப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை அளந்து, எல்லை நிர்ணயம் செய்தனர்.