கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கால பைரவருக்கு நடந்த சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மறைந்த முன்னோர்களுக்கு ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று விரதமிருந்து திதி கொடுப்பது வழக்கம். அவ்வாறு மாத அமாவாசையில் திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று நீர் நிலைகளில் நீராடி, அந்தணர்களைக் கொண்டு திதி கொடுத்தால் 12 மாதத்திற்கு திதி கொடுத்தன் பலன் பெறலாம்.
நேற்று மகாளய அமாவாசையையொட்டி கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பெண்ணையாறு, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சிவகரதீர்த்த குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். சிறப்பு பூஜை: மகாளய அமாவாசை முன்னிட்டு திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி சங்கு மண்டபத்தில் புனித நீர் கலசங்கள் பிரதிஷ்டை செய்து, 96 வகை மூலிகை பொருட்களை கொண்டு வேத, மூல மற்றும் மால மந்திரங்களுடன் ேஹாமம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. இரவு கால பைரவருக்கு சகஸ்கரநாம பூஜை நடைபெற்றது. சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரையில், ஏராளமானோர் காலை முதல் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் நடராஜரை தரிசனம் செய்தனர். மகாளய அம்மாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சிவகங்கை தீர்த்தக் குளத்தில் குவிந்ததால் நடராஜர் கோவிலில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.