பதிவு செய்த நாள்
21
செப்
2017
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நேற்று நவராத்திரி விழா துவங்கியது. இதில், மனித வாழ்வியல் நெறிகளை விளக்கும் வகையிலும், புராண கதைகளை விளக்கும் வகையிலும், கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. யோகிராம் சுரத்குமார் உள்ளிட்ட பல்வேறு மகான்களின் உருவ பொம்மைகள், அன்னபூரணி, சிம்மவாஹினி, சரஸ்வதி, லட்சுமி, துர்காதேவி, கெஜலட்சுமி, லலிதாம்பாள் உள்ளிட்ட, அம்பாளின் பல்வேறு அவதாரங்கள், பெருமாளின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களான காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய கோவில்கள் மற்றும் ராமர் ஜனனம் முதல், பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து காட்சிகளும், கொலுவில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம நிர்வாகி, ஜஸ்டிஸ் அருணாச்சலம் செய்துள்ளார்.