பதிவு செய்த நாள்
21
செப்
2017
12:09
பவானி: ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள, கூடுதுறை காவிரி ஆற்றில் காவிரி மஹா புஷ்கர விழா கணபதி பூஜை செய்து, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், காவிரி மஹா புஷ்கர விழா, தலைக்காவிரி முதல் ஆற்று நீர் செல்லும் பகுதிகளில், பல ஊர்களில் கடந்த, 12 துவங்கி, 24 வரை நடக்கிறது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் காவிரி, பவானி, அமுதநதி சங்கமிக்கும் கூடுதுறை காவிரி ஆற்றில், எங்கள் பவானி பவுண்டேசன், அகில பாரதிய துறவியர் சங்கத்தின் மூலம் விழா துவங்கியது. நேற்று காலை, 8.00 மணியளவில் பவானி எல்லையம்மன் கோவிலில் இருந்து துலாஊர் ஆதினம், கலவைமடம் சச்சிதானந்தசுவாமிகள், பாலமுருகன்அடிமை, மன்னார்குடி சென்ட அலங்கார ஜீயர், ரத்தினகிரிசுவாமிகள், திருவனம் சாந்தசுவாமிகள், விழாகுழு தலைவர் செந்தில்பாலசுப்பிரமணியன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பூர் எம்.பி., சத்தியபாமா ஆகியோர், மேளதாளங்கள் முழங்க சென்றனர். முன்னதாக பசு, நடன குதிரை, இரண்டு யானைகள் ஆகியவற்றுடன் காவிரி அன்னை, புனித தீர்த்த குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கூடுதுறை சென்றடைந்தது. பின்னர், காயத்திரி லிங்கேஸ்வரர் மண்டபத்தில் கணபதி பூஜை செய்து, பூர்ணாஹூதி நடந்து, காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு, புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர். இதையடுத்து, பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்று விழா துவங்கியது. காவிரி ஆற்றின் மைய பகுதியில், 10 அடி அகலம், 100 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மேடையில் மாலை, 6:30 மணி முதல் பவானி சங்கமேஸ்வரர் கோவில் மணிகண்ட சிவாச்சாரியாரின் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, யாகம் நடத்தினர். இரவு, 8:00 மணியளவில் காவிரி அன்னைக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.