பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
சேலம்: சுப்ரமணியர் கோவிலில், கொடியேற்று விழா நடந்தது. கந்தசஷ்டி விழாவையொட்டி, சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு, கொடியேற்றப்பட்டது. முன்னதாக, கணபதி ஹோமம் நடந்தது. 10:00 மணிக்கு, திரு.வி.க., பாதை, மாரிமுத்து தெரு, பழைய பிள்ளையார் கோவில் வழியாக, சுவாமியை ஊர்வலம் எடுத்து வந்தனர். பின், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு, வெள்ளி கவசத்துடன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வரும், 25 மாலை, 3:00 மணிக்கு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அதில், ஆறுமுக சுவாமி, சூரனை வதம் செய்கிறார். 26ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதேபோல், உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், பெரமனூர் கந்தசாமி, சூரமங்கலம் காவடி பழனி யாண்டவர் ஆகிய கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், மூலவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 24ல் தெப்ப உற்சவம், 25ல் சூரசம்ஹாரம், 26ல் தெய்வானையுடன், 27ல் வள்ளியுடன் பாலசுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.