ஒருசமயம் திருவஹீந்திரபுரத்தில் இருந்து சுவாமி வேதாந்த தேசிகர், காஞ்சிபுரம் சென்றார். அவர் மேல் பொறாமை கொண்டிருந்த சிலர், பாம்பாட்டி ஒருவனை அழைத்து தேசிகர் மீது பாம்புகளை ஏவி விடச் செய்தனர். சங்கபாலன் என்ற கொடிய பாம்பினைத் தவிர மற்ற அனைத்து அரவங்களும் சுவாமி தேசிகர் போட்ட கோட்டுக்குள் கட்டுண்டன. சங்கபாலன் மட்டும் பெரும் சீற்றத்துடன் வர, சுவாமிகள் கருட தண்டகம் பாடினார். உடனே கருடன் தோன்றி பாம்புகளைக் கவர்ந்து சென்றார். பின்னர் பாம்பாட்டி தவறு உணர்ந்து சுவாமிகளிடம் வேண்ட, கருடனை மீண்டும் அழைத்து பாம்புகளைப் பெற்று பாம்பாட்டியிடம் அளித்தார். நடந்த அனைத்தையும் பார்த்த பொறாமைக்காரர்கள், வெட்கித் தலை குனிந்து சுவாமி தேசிகரைப் பணிந்தனர். கருட தண்டகத்தை விளக்கும் இந்த ஓவியத்தை தஞ்சை மாமணிக்கோயிகளுள் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயிலில், தேசிகர் சந்நதியில் பார்க்கலாம்.