பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
சபரிமலை : சபரிமலையில், அய்யப்பா சேவா சங்கத்தின் சேவைப்பணிகள் துவங்கின. இந்த ஆண்டு முதல், மீண்டும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சபரிமலையில், பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியில் அய்யப்பா சேவா சங்கம் ஈடுபட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவது, நோய்வாய் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது, மரணம் அடைய நேர்ந்தால், அவரது உடலை, பம்பையில் கொண்டு சேர்ப்பது என, பல்வேறு சேவைகளை இந்த சங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சேவைப்பணிகளை, தேவசம்போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், துவக்கி வைத்தார். முதற்கட்டமாக, 260 தன்னார்வ தொண்டர்கள் வந்துள்ளனர்.
பம்பை முதல், சன்னிதானம் வரை உள்ள பாதையில், குடிநீர் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 14 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதையில், பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அய்யப்பா சேவா சங்க தொண்டர்கள் வந்து, துாக்கி செல்வர். இதற்காக, சங்க அலுவலகத்தில் ஒயர்லெஸ் கருவியுடன், ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டிருப்பார். சன்னிதானத்தில் ஒரு மருத்துவமனையும், பம்பையில் ஒரு ஆம்புலன்சும், சங்கம் சார்பில் உள்ளது. நீதிமன்ற உத்தரவால், கடந்த ஆண்டு அய்யப்பா சேவா சங்கத்துக்கு அன்னதானம் வழங்க அனுமதி கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அன்னதானம் துவங்கிஉள்ளது. தினமும் 20 ஆயிரம் பேருக்கு, மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்களை பக்தர்கள் நன்கொடையாக அனுப்புகின்றனர்.
பம்பையில் 24 மணி நேரமும்இரு முடி கட்ட வசதி : பம்பையில் இரு முடி கட்டுவதற்கு, கணபதி கோவில் அருகே, 24 மணி நேர வசதி செய்யப்பட்டுள்ளது. இரு முடி கட்டு ஏந்தி வருவோர் மட்டுமே, சபரிமலையில் 18 படியேறி, தரிசனம் நடத்த முடியும். சூழ்நிலைகளால், ஊரில் இருந்து இருமுடி கட்டு எடுத்து வர முடியாதோருக்கு, பம்பையில் இரு முடி கட்டுவதற்கு, தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. பம்பை கணபதி கோவில் அருகில் உள்ள, தேவசம்போர்டு நிர்வாக அலுவலகத்தில், 250 ரூபாய் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று, கோவில் கட்டுநிறை மண்டபத்தில் காட்ட வேண்டும். அங்கு, பம்பா மேல்சாந்தியோ, அவருடன் உள்ள பூசாரிகளோ நெய் தேங்காய் நிறைத்து, இரு முடி கட்டி, தலையில் ஏற்றி அனுப்புவர். கூடுதலாக நெய் தேங்காய் வேண்டுமெனில் ஒரு தேங்காய்க்கு, 80 ரூபாய் செலுத்த வேண்டும்.ஊரில் இருந்து, இரு முடி கட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டு வந்தால், 150 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
பம்பை - தமிழகம் பஸ்கள் : பம்பையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு, தமிழக அரசு 30 பெர்மிட்டுகள் வழங்கியுள்ளன.இதன் மூலம் சென்னைக்கு ஆறு; கோவைக்கு ஆறு; பழநி, தென்காசிக்கு தலா ஏழு; தேனிக்கு மூன்று; கன்னியாகுமரிக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக, பம்பைக்கு, 102 பஸ்கள் வந்துள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.